14 Mar 11

உங்கள் இணைய தள பதிவுகள் திமுக எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக தலைதூக்குகிறதே என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கான

விளக்கமாக இன்றைய பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

2 ஜி பூதம் இப்போது விசுவருபமெடுத்து திமுகவை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. தங்கள் ஐந்தாண்டு கால சாதனைகளை முன்னிறுத்தி வெற்றி பெறவேண்டும் என்பது திமுகவின் ஒரு தேர்தல் வியூகம்.

அதற்காக முதல்வர் தினமும் முரசொலியில் பல்வேறு துறைகளின் சாதனைகள் குறித்து தொடர்ந்து எழதி வருகிறார். அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களோடு!.

புள்ளிவிவரங்களை இந்த தேர்தல் பரபரப்பில் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

அவர்களின் சாதனைகளை பூதாகரப்படுத்த அவர்களுக்கு ஏராளமான தொலைக்காட்சி சானல்கள் உண்டு. அதன் மூலம் தமிழக வாக்காளர்களை `மூளைச் சலவை’ செய்து விடலாம் என்று அவர் நினைக்கிறார்.

அதுவும் திமுக இம்முறை குறிவைத்திருப்பது கிராமப்புற பாமர வாக்காளர்களைத்தான். அதற்கு அடையாளமாக ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் என்கிற மாபெரும் மக்கள் சக்தியை சென்னை நகரில் பல தொகுதிகளில் தோற்கடித்தது திமுக. இப்போது அந்தக் கோட்டையை விட்டு ஒடப் பார்க்கிறது.

சென்னை நகரில் படித்தவர்கள் அதிகம். அவர்களுக்கு இந்த 2ஜி விவகாரம், 1,76,0000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு என்பது தெரியும் . அதனால் தான் கிராமங்களை நோக்கி ஒடுகிறது திமுக.

ஒடுவதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள். ஒன்று அவர்களது கண்டுபிடிப்பான `திருமங்கலம் தேர்தல் ஃபார்முலா’. அரசியல் விஞ்ஞானி அழகிரியின் அற்புத கண்டுபிடிப்பு. வாக்குகளை வாங்கிக்கொடுக்கும் அலாவூதினின் அற்புத பூதம்.இரண்டாவது அவர்களது இலவசங்கள்.

முதல் திட்டம் பொதுத் தேர்தலில் போணியாகாது என்பதற்கு உதாரணம் பெண்ணாகரத்தில் நடந்த இடைத் தேர்தல். அந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானது. திமுக இந்த தேர்தலில் குடும்பத்திற்கு 10,000 வரை கொடுத்தது என்றெல்லாம் அப்போது செய்திகள் வந்தது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனாலும். தனியாக நின்று எதிர்க்கட்சிகளான பா.ம.க. தேமுதிக. அதிமுக வாக்குளை கூட்டினால் திமுகவை விட அதிகம்.

அதாவது பணத்தையும் வாங்கிக்கொண்டு மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

காசு வாங்கிய மக்கள் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை வாக்குக்கு பணம் கொடுக்கிற கட்சிகளுக்கு உண்டு. ஆனால் அந்த காலம் மலையேறிவிட்டது. திமுக அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சிகளின் மூலமாகவே பாமர வாக்காளருக்குக் கூட தெளிவு வந்துவிட்டது’

வீட்டிலிருந்து காசைக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. நம் பணத்தை அடித்து நம்மிடமே கொடுக்கிறார்கள் என்கிற தெளிவு ஒரளவு வந்துவிட்டது.

அடுத்து இவர்களது இலவச திட்டங்கள். அதன் நிலை என்ன தெரியுமா ? `இனிக்கிறது என்பதால் துப்பவும் முடியாமல், கசக்கிறது என்பதால் விழங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கசப்பு அதிகமாகவே இருப்பதாக உணர ஆரம்பித்துவிட்டார்கள்.

உணர்த்தியது கலைஞரின் குடும்ப ஆதிக்கம். தொழில் செய்வோர் ஒவ்வொருவரும் இனி நம் தொழில் நம் வசம் இருக்குமா கலைஞர் குடும்பம்
அதிகார பலத்தோடு பிடுங்கிக் கொள்ளுமா என்கிற பயம் வந்துவிட்டது.

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொபைல் போன், விமான போக்குவரத்து,தனியார் பொறியியற்,மருத்துவக் கல்லூரிகள், மதுபானத் தயாரிப்பு தொழிற்சாலைகள்.நில உடைமை தொழில்களிலும் குடும்பத்தினர் புகுந்துவிட்டார்கள்.

தொழில்துறையில் இந்த குடும்பத்திற்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தவர் முரசொலி மாறனின் புதல்வர்கள் கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும்தான்
அதன் பூர்வ கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1992ம் வருட காலங்களில் சாடிலைட் தொலைக்காட்சி என்கிற தொழில் நுட்பம் சந்தர்ப்ப வசத்தால் கலாநிதி மாறனிடம் வந்தது. அப்போது அவர்கள் பூமாலை விடியோ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார்கள்.அது அவர்களின் குங்குமம் பத்திரிகையின் ஒரு பகுதியாக இருந்தது.

அப்போது அந்தத் தொழில் துவங்க அவர்களுக்கு மூதலீடு தேவைப்பட்டது. அதற்காக திமுக கட்சி நிதி ( இது எத்தனை கழக உடன்பிறப்புகளுக்கு தெரியும் என்பது தெரியாது) வங்கிக்கு செக்யூரிட்டி டெபாசிட்டாக கொடுத்துத்தான் வங்கியில் கடன் வாங்கினார்கள். கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் மாடிப் பகுதியை அவர்களுக்கு கொடுத்தனர். அதற்கு சன் டிவி கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.

தொலைக்காட்சி துவங்கியவுடன் அதன் அதிபர் போட்ட முதல் உத்தரவு
கழக கரை வேட்டி கட்டிய யாரும் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான் என்று அப்போதே செய்திகள் கசிய ஆரம்பித்தது.

அரசியல் பலம், திமுக தலைவர் தாத்தா கலைஞரின் ஆசி, முதல் தனியார் சேனல் என்று மக்களிடையே ஏற்பட்ட பிரமிப்பு, அதன் வளர்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்ட பிரபலங்கள் மூலமாக அசுர வளர்ச்சி பெற்றார்கள்.

தமிழ் திரைப்பட உலகின் மீதான் இவர்களின் தாக்குதல் அப்போதே மெதுவாகத் துவங்கிவிட்டது. ஊடகம் என்பது மக்களைச் சென்றடைவது, அதை குடும்பத்தினர் பார்க்கிறார்கள் அதனால் கொடுக்கிற நிகழ்ச்சியில்
பொழதுபோக்கும் இருக்க வேண்டும், அதே சமயம் நமக்கும் ஒரு சமூக பொறுப்பிருக்கிறது. அதனால் தரமான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டுமென்கிற அக்கறை எப்போதுமே அவர்களுக்கு இருந்ததில்லை.
இவர்கள் வெற்றி பெற்றார்கள். இவர்களின் வெற்றி ஃபார்மூலாவை
மற்ற தொலைக்காட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் ஆண்களுக்கு டாஸ்மாக். பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் சினிமா, மற்றும் ஒப்பாரி தொடர்கள். இதனால் பல குடும்ப பெண்கள் மன நோயாளிகள் ஆனார்கள். தொடர்களில் வரும் குடும்ப பெண்கள் பெரும்பாலும்
ஒழக்கமற்ற பெண்களாகவே இருந்தார்கள். பண்டிகை காலங்களில் சினிமாவைத் தவிர வேறு எதையுமே தமிழன் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.குழந்தைகளை கூட சினிமாப் பாட்டிற்கு ஆபாச நடனம் ஆட வைத்தார்கள்.

சாம்ராஜ்யம் விரிந்து பரந்து போது, இந்த தொலைக்காட்சிகளின் வினியோக
தளமான கேபிள் இணைப்புத் தொழிலையும் இவர்களே எடுத்துக்கொண்டார்கள். இவர்கள் தயவின்றி யாரும் தொலைக்காட்சி துவங்கிவிட முடியாது. அவர்களின் ஆதிக்கம் பரவ ஆரம்பித்தது. அரசீயல் கட்சிகளின் சேனல்கள்,தேசிய உலக அளவிலான சேனல்களில் காணப்படும் தெளிவு, சின்ன சேனல்களான தமிழன், இமயம், வின் டிவிகளுக்கு கிடையாது.
இந்த சின்ன சேனல்கள் தெளிவாக தெரியவேண்டுமானால் அவர்கள் அவ்வப்போது நிர்ணயிக்கிற தொகையை கொடுத்தாக வேண்டும்.

இந்த நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் மற்ற மாநிலங்களில் சேனல் துவங்கலாம். நியாயமான கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் இந்த சேனல் சர்வாதிகாரிகளுக்கு
தொழில் தர்மம் என்பதே கெட்ட வார்த்தை.

அடுத்து நாளிதழும் அவர்கள் கையில் வந்தது. இதில் முளைத்தது குடும்பச் சண்டை. அதில் விளைவு இவர்களின் தினகரன் நாளிதழில் பணிபுரிந்த ஊழியர்கள் கொலையுண்டார்கள். குடும்பம் பிரிந்தது. கலைஞர் சேனல் என்று
கலைஞரின் குடும்பத்தினருக்காக ஒரு சேனல் துவங்கப்பட்டது.

சண்டையின் போது தன் பிள்ளைகளுக்கு எதிரியாகிவிட்ட பேரன்களின் கேபிள் ஆதிக்கத்தை முறியடிக்க அரசு கேபிள் துவங்கப்போவதாக அறிவித்தது அரசு.அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிதான் உமா சங்கர். குடும்பம் இணைந்த பிறகு அரசு கேபிள் திட்டமும், அதற்காக அரசு செலவழித்த பணமும் குப்பைக்கு போனது. பின்னர் அதில் நியாயம் கேட்ட
அதிகாரி உமா சங்கர் என்ன பாடுபட்டாரென்பது நாடறிந்த கதை.

சரி, கலைஞர் ஒரு இலக்கியவாதி . அவர் பெயரால் துவங்கப்படும் சேனலில் நல்ல தரமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும்
பொய்த்துப் போனது. ஆரம்பத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கலைஞரே தேர்ந்தெடுத்தார். அதில் மிகப்பிரபலமானது மானாட மயிலாட நிகழ்ச்சி. அதாவது முன்பெல்லாம் கிராமங்களில் பொருட்காட்சி, திருவிழாக்களில் ஆபாச ரெகார்ட் டான்ஸ் நடக்கும். அதையே தொழில்நுட்பத்தோடு, திரையுலக
பிரபலங்களை வைத்து சின்னத்திரைக்கு கொண்டு வந்தார்கள். இந்த அதி நவீன ரெகார்ட் டான்ஸ்தான் தனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று பறைசாற்றி தன் `ரசனை’யின் மேன்மையை வெளிப்படுத்தினார் முதல்வ்ர்.

இந்த சேனல் போட்டி பல ரூபங்களில் வெளிப்பட்டது. சேனல் மூலமாக இந்தியாவின் மிகச் சில கோடிஸ்வரர்களில் ஒருவரானார் அதன் அதிபர் கலாநிதி மாறன். அவருடைய தொழில் பல்வேறு தளங்களில் விரிந்து பரந்தது.

அதே பாணியில் குடும்பத்தினர் அனைவரும் களத்தில் இறங்கினார்கள்.விளைவு இன்று பல தொழில்கள் அவர்களின் கையில்தான்.லாபகரமான தொழில்கள் எல்லாமே தங்களுக்கு வேண்டுமென்கிற வெறி குடும்பத்தினருக்கு வந்துவிட்டது.

மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழர்கள் பலரும் வேறு மாநிலத்திற்கு புலம் பெயர வேண்டியதுதான். முன்பு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவை கைப்பற்றினான்.

தமிழகத்தை கைப்பற்ற ஆரம்பித்திருக்கும் நவீன கிழக்கிந்திய கம்பெனிதான் கலைஞர் குடும்பம்.அதனால் இந்த தேர்தல் தமிழகத்திற்கான ஒரு சுதந்திர போராட்டம் என்பதுதான் உண்மை. புரிந்து கொள்வார்களா தமிழர்கள்.

Share

No related posts.


Filed under: Tamil

Trackback Uri


4 Comments.

  • ஹரிஹரன் says:

    என்ன அண்ணா தேர்தலுக்கு தேர்தல் தான் உங்களின் பிளாக்குக்கே வருவீர்கள் போலிருக்கிறது..

  • அறிவன்#11802717200764379909 says:

    தொகுத்துக் கொடுத்தது போல இருக்கிறது…

    திமுக வின் வாய்ப்புகள் குறைவாக இருப்பது போல்தான் தோன்றுகிறுது…

  • Rathnavel says:

    நல்ல பதிவு.
    விடுதலை கிடைக்குமா?

  • உண்மைத்தமிழன் says:

    நன்றியோ நன்றி.. குருவை மிஞ்ச முடியுமா..?



Leave a Comment