2 Jun 11

 

ஜீன் 30ந் தேதி. 2001. அப்போது தமிழகத்து முதலமைச்சர் ஜெயலலிதா. அன்று தான் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவத்தை ஒரு அனுதாப அலையாக  மாற்றிக் காட்டியது சன் டிவி.

தமிழகமே கொந்தளித்துவிட்ட நிலைதான். அப்போது நான் ஜெயா டிவியில் இருந்தேன். நானும் `தராசு’ ஆசிரியர் ஷ்யாம் அவர்களும் இந்த கைது சம்பவத்தைப் பற்றி பேசினோம்.

நான் பேசியது இதுதான். ` சன் டிவி தன் ஜால வித்தைகளைக் காட்டி,அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் தாத்தாவிற்கு தன் நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார். சன் டிவி என்ன திருக்குவளையில் நிலத்தை விற்று கொண்டு வந்த பணத்தில் துவங்கப்பட்டதா என்ன ? திமுக தலைவர் கட்சிக்கு நிதி வேண்டுமென்று முரசொலியில் கடிதம் எழதுவார். உடனே விசுவாச கழக உடன்பிறப்புக்கள் துண்டேந்தி எட்டணாவும் ஒரு ரூபாயுமாக பல லட்சங்களை திரட்டி கட்சிக்கு நிதி சேர்ப்பார்கள். அப்படி சேர்ந்த நிதியிலிருந்து கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். பேரன் மாறன் சன் டிவி துவங்க பணம் தேவைப்பட்டது. அப்போது கட்சி நிதியிலிருந்த 8 கோடியை பணயமாக வங்கியில் கொடுத்து கடன் வாங்கி துவங்கப்பட்டதுதான் சன் டிவி. தாத்தா அறிவாலயத்தின் மாடியையே பேரனுக்கு `வாடகை’க்கு கொடுத்தார். அது என்ன வாடகை என்பது தாத்தாவுக்கும், முரசொலி மாறனுக்கும், பேரனுக்கு தான் தெரியும்.

அப்படி உருவாக்கப்பட்ட சன் டிவி துவங்கியவுடன் அதன் அதிபர் கலாநிதி மாறன் போட்ட முதல் உத்தரவே கீழே உள்ள கட்சி கரை வேட்டிகள் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான்.  எந்த பேரன்களுக்காக கலைஞர் இதையெல்லாம் செய்தாரோ அதே பேரன்களால்தான் அவரது குடும்பத்திற்கே ஒரு நாள் ஆபத்தாக முடியப்போகிறது.’

இந்த பேட்டி ஜெயா டிவியில் ஜீன் 30 துவங்கி அடுத்த பல நாட்கள் ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பேரன்களால் வந்த ஆபத்துதான் 2007ல் நடந்த மதுரை தினகரன் எரிப்பு சம்பவம். அதற்கு பிறகு குடும்பம் பிரிந்ததும், பிறகு சேர்ந்ததும், அதற்காக கலைஞர் கண்கள் பனித்து, நெஞ்சம் இனித்த கதையெல்லாம் நாடே அறியும்.

கட்சிக்காரன் பணத்தில் தொலைக்காட்சியை துவங்கிவிட்டு அந்தக் கட்சிக்காரனையே உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை நான் அன்று ஒரு குற்றச்சாட்டாக சொன்னேன். அதுவே இன்று அவர்களுக்கு ஒரு சாட்சியாகிவிட்டது. 31ந்தேதி டைம்ஸ் நெள் தொலைக்காட்சியில் அலைக்கற்றை ஊழலில் தயாநிதி மாறனின் அத்துமீறலைப் பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள்.

அதில் மாறன் சகோதரர்களின் ஊதுகுழலாக பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.`சன் டிவிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை. கட்சிக்காரர்கள் மாடியிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கே வரக்கூடாது என்று உத்தரவு போட்டவர் கலாநிதி மாறன்’ என்றார்.

கட்சி வேண்டும். அதில் தன் சகோதரர் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வேண்டும். அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும். அதன் மூலம் ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தங்கள் தொழிலுக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஊழல் என்று வந்தால் சன் டிவி நடுநிலையான தொலைக்காட்சி, அதற்கு திமுகவிற்கு எந்த தொடர்புமில்லை என்று சொல்வதுதான் அவர்களுடைய கார்பரேட் தர்மம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அடுத்த ஐந்து வருடத்திற்காக காத்துக்கொண்டு, `சூரிய சின்னத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு’ என்று கோஷ்ம் போட்டு திரிய வேண்டியதுதான். நீ உழைப்பது உன் கட்சிக்காக அல்ல. கட்சித்தலைவரின் குடும்ப தொழிலுக்கு நீ கூலி பெறாத ஒரு தொழிலாளி என்பது எப்போது அவர்களுக்கு புரியும். தலைவர் குடும்பத்து உயர்மட்டக்குழ் திஹார் சிறையில் கூடும்போது உடன்பிறப்புகளுக்கு புரியவருமோ?

Share

Filed under: Tamil

Trackback Uri






16 Apr 11

என்னவாகும் தமிழக தேர்தல் முடிவுகள், தலைவர்களும், தொண்டர்களும்,தமிழக வாக்காளர்களும், ஆவலோடு, ஆர்வத்தோடு, பரபரப்போடு, பதட்டத்தோடு, கொதிப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் விருப்பத்தையெல்லாம் ` இப்படித்தான் இருக்கும் தேர்தல் முடிவுகள் ‘ அன்று ஆருடம் சொல்லி தங்களை தாங்களே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மாறும் என்பது நம்பிக்கை

மாறாது என்பது எதிர்பார்ப்பு.

இரண்டும்தான் தமிழகத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அடித்ததை பாதுகாக்க வேண்டும் என்பது நம்பிக்கை

இனியும் அடிக்கவிடக்கூடாது என்பது எதிர்பார்ப்பு.

`மாற்றம் என்பது மானிட தத்துவம்

  மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.’

என்றார் கவியரசு கண்ணதாசன்.

நானும் அதை அறிவேன். 1967 ஆண்டில் தமிழகத்தில் பதிவான் வாக்குகள் 76 சதவீதத்திற்கு மேல்.  அதற்குப் பிறகு இப்போதுதான் 78 ஐ தொட்டிருக்கிறது.

`இவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே’ என்று மக்கள் நினைத்திருந்தால், மக்கள் விட்டிலேயே இருந்திருப்பார்கள். வெளியே வந்திருக்கமாட்டார்கள்.

வெளியே மாசு படிந்த சூழல் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. `மாசு கட்டுப்பாட்டு வாரியம்’ மாதிரி மக்கள் வெளியே கிளம்பி வந்திருக்கிறார்கள்.

இந்த எழச்சியின் விளைவுகள் என்னவாகும் இருக்கும் என்பது தலைவர்களுக்குத் தெரியும். மேலே சொன்ன எதிர்பார்ப்பு, நம்பிக்கை அணியின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றிவிடும்.

நம்பிக்கை வீண்போகாது. காரணம் நான் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.

Share

Filed under: Tamil

Trackback Uri






12 Apr 11

SUDHANGAN KARUNANIDHI

 

 

நாளை நான் வாக்களிக்கப்போகிறேன். நீங்களும் அதை செய்வீர்கள், செய்ய வேண்டும்.உங்கள் ஒரு நாள் அதிகாரத்தை நீங்கள் நழவ விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடிமை சாசனத்தில் கையெழத்திட்டுவிட்டிர்கள் என்றுதான் பொருள்.

அதற்கு முன் என் வலைப்பதிவில் வாக்காளர்களுக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரது இணையதளத்தில் ` கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்கிற தலைப்பில் அவர்  எழதியதைப் பார்க்க சொல்லியிருந்தார்.

அமுதவன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஒழக்கமான எழத்திற்கும், வாழ்க்கைக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட ஒரு மன ஒழக்கம் இருப்பதால்தான் அவர் இன்றைய தமிழக தேர்தல் களத்தை  சித்தாந்த ரீதியாக அலசியிருக்கிறார்.

எனக்கு சித்தாந்த அறிவைவிட, யதார்த்த அனுபவம் கொஞ்சம் உண்டு. காரணம் அடிப்படையில் நான் ஒரு செய்தியாளன். தமிழகத்து தலைவர்களுக்கு என்னைத் தெரியும்.நண்பர் அமுதவனைப் போல படைப்பாற்றல் மிக்க எழத்தாளனில்லை நான்.

 இந்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் நடக்கும் போட்டி என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழக வாக்காள குடும்பங்களுக்கும் நடக்கும் போட்டி.

என் இணையதளத்தில் நான் மார்ச் 14 2011ல் `தமிழகத்தில் நடக்கப்போவது தேர்தலா > சுதந்திரப்போராட்டமா என்று எழதியிருந்தேன். அதுதான் உண்மை.  அன்று பிரிட்டிஷின் ராப்ர்ட் க்ளைவ், இன்று கலைஞர் கருணாநிதி.

1725ல்  இங்கிலாந்தில்    பிறந்த க்ளைவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் இலக்கிய நடையும், பேச்சுத்திறனும் இருந்தது.

1924ல் திருக்குவளையில் பிறந்த கலைஞருக்கும் இந்த இரண்டு திறன்களும் உண்டு.

ராபர்ட் க்ளைவ்வைப் பற்றி குறிப்பு ஒன்றில்  ` கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர், நிர்வாகி, அவர்தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தார்’ என்கிறது.

கலைஞரும், ஆரம்ப நாட்களில் அண்ணா போர்படையின் செயல்வீரர், நிர்வாகி.

பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்திய ராபர்ட் க்ளைவ், சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஏராளமான சொத்துக்களை சேர்த்துக் கொண்டார்.

இதுவும் கலைஞர் கருணாநிதிக்கு பொருந்தும்.

இதே ரீதியில் ஒப்பிட்டால் கலைஞரை நவீன ராபர்ட் க்ளைவ் என்றே சொல்லலாம்.ஆனால் இருவருக்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு.

ராபர்ட் க்ளைவ், அல்லது அதற்குப் பிறகு நம்மை ஆண்ட பிரிட்டிஷாரோ தங்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர்களை அழித்ததில்லை.

ஆனால், கலைஞர் விஷயமே வேறு. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்குப் போகும்போதும், அந்த ஊரிலிருந்த, தன்னோடு பழகிய பழைய திமுக நண்பர்களின் பெயர்களையெல்லாம் கண்ணீர் மல்க பட்டியிலிடுவார்.

உதாரணம் மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். மதுரையின் முன்னாள் மேயர் முத்து, பிடிஆர் பழனிவேல் ராஜன், கமபம் ராஜாங்கம், காவேரிமணியம், கம்பம் நடராஜன், போடி முத்துமனோகரன், மதுரை கிருஷ்ணன் ( இவர் தான் அழகிரியின் ஆட்களால் கொல்லப்படதாக வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன். இவரது இனிஷியலை சொன்னால் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடுமாம். அதனால் அவர் சொல்லவில்லை).எஸ்.எஸ். தென்னரசு.

கலைஞர் கருணாநிதி பட்டியலிட்ட அவர்களின் இன்றைய நிலை என்ன? மதுரை முத்துவின் குடும்பம் இந்தியாவிலேயே இல்லை. பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனும் இப்போது அமெரிக்காவில்!.மதுரை எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தபோது, அங்கே திமுகவின் படைவீரராக இருந்தவர் காவேரிமணியம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டபோது, அவரை தன் பிள்ளையாக பார்த்துக்கொண்டவர் காவேரிமணியம். அவர் இறந்தபின், அவரது மனைவியும், பிள்ளையும் அழகிரியைப் பார்க்கக் கூட தவம் கிடந்த கதையை மதுரை மக்கள் நன்கு அறிவீர்கள். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இப்படி ஒரு மாவட்டத்திலும், அவர் பட்டியலிட்ட முன்னாள் திமுகவினருக்குப் பின்னால் பல சோக கதைகள் உண்டு. .

தங்களுக்கு  உழைத்தவர்களுக்கு சொத்தும், பரிசும் கொடுத்து மகிழ்ந்தது பிரிட்டிஷ் அரசு.

ஆனால் இன்றைய `க்ளைவ்’ சாம்ராஜ்யத்தில் கட்சிக்காக பல வ்ருடங்கள் மாடாக உழைத்த உடன்பிறப்புக்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் திமுகவிலிருந்து, அதிமுகவிற்குப் போய் அங்கேயும் பதவி சுகம் அனுபவித்து அவர்கள் மீண்டும் திமுகவிற்கு வந்தால் அவர்களுக்குத்தான் பதவி. உதாரணம், தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன்,  எ.வ.வேலு,அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி, அங்கே அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷணன், கருப்பசாமிபாண்டியன், ஜெகத்ரட்சகன் இவர்கள்தான் கலைஞரின் சொத்துக்களுக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துக்கள் பத்திரமாக இருந்தன. போகும்போது கூட அதை அவர்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை. குறிப்பாக இந்தியா விவசாய நாடு, அதன் வளங்கள் மிகவும் முக்கியம் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அதனால் விவசாய நிலங்களையும், விவசாயப் பயிர்களையும் பாதுகாத்தார்கள்.

நம்முடைய க்ளைவ் ராஜ்ஜியத்தில் நடப்பது என்ன ?  தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை நிலன்களும், வெள்ளாமையும் அழிக்கப்படுகின்றன.அதிலே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவ, பொறியியற்க் கல்லூரிகள் இவையெல்லாமே அந்தந்த மாவட்ட திமுக அமைச்சர்களுக்கு, அவர்களது பினாமிகலுக்கும் சொந்தம். மாவட்டங்களில் குடியிருப்புக்களும், நிலங்களையும் மிரட்டியே வளைத்துப் போட்டுக் கொண்டதை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள். மதுரை அருகேயுள்ள சீவ்ரக் கோட்டையில் அழகிரியின் மனைவி காந்தி பெயரில் எழம்பி வரும் கல்லூரி விளைநிலத்தில் அல்லவா வளர்ந்து நிற்கப்போகிறது.

5,000 வருட உலக சரித்திரத்தில், ரோமானியர்களைத் தவிர யாரும் விவசாய, வெள்ளாமை கூறுகளை அழித்ததாக வரலாறே இல்லை. அதிலும் வரலாற்று நாயகர் கலைஞர்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்ட மறுத்ததினால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு. கப்பம் கட்டி விசுவாசமாக இருந்த குறுநில மன்னர்களுக்கு ம பிரிட்டிஷ் ஆட்சி தொந்தரவு கொடுக்கவில்லல.

ஆனால், இன்று மக்களை மிரட்டி அல்லவா அவர்களது சொத்துக்கள் திமுக களவீரர்களால் ஆக்ரமிக்கப்படுகிறது. உதாரணம் திருச்சி. அங்கே அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், வாடகைக்கு கூட வீடு கிடைக்காது. காரணம் இவர்களே எல்லா வீடுகளையும் வாங்கி வணிக வளாகங்களை கட்டி விடுவார்கள் என்று மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.

 `சதி’ என்கிற பெயரில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்தது. இதை ராஜாராம் மோகன் ராய் எதிரத்தபோது, அதற்கு தடை போட்டு பெண்களின் வாழம் உரிமையை நிலைநாட்டியது வெள்ளைக்கார அரசு.

ஆனால், இவர்களது ஊடகங்களின் காட்டப்படும் பெண்களின் நிலை இன்று என்ன ? படி தாண்டுகிற பத்தினிகள்தானே இன்று இவர்களின் நெடுந்தொடர் கதாநாயகிகள். பல குடும்பபெண்கள் இந்த நெடுந் தொடர்களைப் பார்த்து மனநோயாளியாகிப் போவதுதானே உண்மை.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால் நம் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை.

இன்று அத்தனை கலாச்சார சீர்கேடுகளுக்கும் பிரச்சாரம் இவர்களது ஊடகங்கள் வாயிலாகத்தானே நடக்கிறது. சினிமா, ரிகார்ட் டான்ஸ் தவிர, அறிவு பூர்வமான நிகழ்ச்சியை இந்த ஊடகங்களின் பார்க்க முடியுமா ?

இன்னும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் இது தமிழ்நாட்டு வாக்காள குடும்பங்களின் அன்றாட பிரச்னை, பீதி.

இந்தக் கொடுமைகளுக்கு மாற்று சக்தி ? கடலில் முழ்குகிறவன் எதையாவது பற்றிக்கொள்ளத்தான் துடிப்பான். அந்த `பற்று’தலுக்கான ஒரு கருவிதான் அதிமுக.

இங்கே கலைஞர் குடும்பம் என்றால், அங்கே சசிகலா குடும்பம் என்று ஒப்பிடலாம்.

சசிகலா குடும்பம் விற்பவர்களின் பொருடகளைத்தான் வாங்குவார்கள்.

கலைஞர் குடும்பம் விற்க விரும்பாதவர்களின் பொருடகளையும் சொத்துக்களையும், மிரட்டியே வாங்குவார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், அடுத்தவர்கள் தொழில்களில் தலையிடமாட்டார்கள். அதற்கான புத்தியோ, சாதுர்யமோ அவருடனிருப்பவர்களுக்கு கிடையாது, தெரியாது.

தங்களைத் தவிர யாரும், எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் தரக மந்திரம்.

இந்த தேர்தலில் இனவாதம், எம்ஜிஆர் அபிமானிகள், இலங்கை விவகாரம், 2 ஜி இதைப் பற்றியெல்லாம் திருவாளர் பொதுஜனத்திற்கு கவலையில்லை..இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பா? அல்லது வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துவிடலாமா என்பதுதான் தமிழக வாக்காளர் மனதில் இன்றுள்ள கேள்வி.

Share

Filed under: Tamil

Trackback Uri






5 Apr 11

தேர்தல் களத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்குள் நான்கு நாட்கள் ஒடிவிட்டது ?திமுக பிரச்சாரத்தில் பல காமெடிகள். தன்னை விட யாரும் எதிலும் முந்திவிடக்கூடாது என்பதற்காக, எதையும் செய்யக்கூடியவர் கலைஞர் கருணாநிதி.

தன் கட்சிக்காக பிரசாரம் செய்யும் காமெடியன் வடிவேலுவிற்க்கு நிறைய  விளம்பரங்கள்  கிடைக்கிறது. எப்போதுமே நல்ல ரேட்டிங் உள்ளவர்களைத்தான் சன் தொலைக்காட்சி பயன்படுத்திக்கொள்ளும். உடனே சன் தொலைக்காட்சி `வடிவேலுவுடன் ஒரு நாள்’ என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. தன்னைவிட வடிவேலுவிற்கு அதிக புகழா? தாங்க முடியவில்லை கருணாநிதியால். உடனே அவரும் காமெடி செய்ய கிளம்பிவிட்டார்.

திமுகவின் முதல் பிரசாரக் கூட்டம் திருச்சியில். அந்த மாவட்டத்தில் குளித்தலையில் தான் 1957ம் ஆண்டு போட்டியிட்டதையும், அப்போது அந்த பகுதியில் தனக்கிருந்த நண்பர்களையும் பட்டியிலிட்டார். அவர் நன்றி மறக்காதவராம். அன்று இவரை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த நண்பர்களின் குடும்ப நிலை இந்நாளில் எப்படி இருக்கிறது என்பதையும் உதாரணத்திற்கு சொல்லி இருக்கலாம். ஆனால் அடுத்த நாள் ஒரு ஆங்கில நாளிதழ் ஒரு மூதாட்டியின் படத்தை வெளியிட்டிருந்தது. அந்த மூதாட்டியின் கணவர்தான் குளித்தலையில் கருணாநிதிக்காக தேர்தலுக்கு பணம் கட்டியவர். அவர் வீட்டிலிருந்தபடிதான் அந்த பிரச்சாரத்தை நடத்தினார். அந்த மூதாட்டி வறுமையான தோற்றத்தோடு, பழைய் ஆதாரங்களோடு சர்க்யூட் ஹவுசுக்கு கருணாநிதியை பார்க்கப் போனார். அவர் விரட்டியடிக்கப்பட்ட கதை வெளியாகியிருந்தது.

இந்த தாய்க்குல செண்டிமெண்ட் காட்சி ஒருபுறமிருக்க, அங்கேதான் அவருடைய தேர்தல் பிரசார முதல் காமெடி. `தேர்தல் கமிஷன் எதிர்க்கட்சியை ஆட்சியிலே உட்கார பாடுபடுகிறது’ என்கிற நகைச்சுவையை ஆரம்பித்தார். உடனே அதற்கடுத்த நாட்களிலே தொல். திருமாவளவன் தன் பங்கிற்கு ` அதிமுக அணியில் இன்னொரு கட்சி கூட்டணி சேர்ந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் தேர்தல் கமிஷன்’ என்றார்.

அதற்குப் பிறகு கூட்டங்களில், தமிழகத்தில் தேர்தல் கமிஷனால் எமெர்ஜென்ஸி கட்டவிழ்த்து விடப்பட்டிருகிறது என்றார். கூடவே எமெர்ஜென்ஸி காலத்து கொடுமைகளை எப்படி தன் மகன், மருமகன் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். இந்த எமெர்ஜென்ஸி கொடுமைகளை 1975ல் நடத்தியவர் அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி. அவர் இதை ஈரோடு, சேலம் கூட்டங்களில் சொன்னார். அந்தக் கூட்டங்களில் அவருக்கு பக்கத்தில் இருந்தபடி அமைதியாக முன்னாள், இந்நாள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்களான .ஈ.வி.கே.எஸ். இளங்க்கோவனும், தங்கபாலுவும் கேட்டுக்கொண்டுதானிருந்தார்கள்.

தமிழக மக்கள் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் மகிழ்ந்து போயிருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளுமே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள். திமுக மட்டும்தான் ஒப்பாரி வைக்கிறது. இந்த ஒப்பாரி நாடகத்தை கேளிக்கையாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

தன் காரியம் நடக்க வேண்டுமென்றால் யாரையும் எவரையும் விமர்சனம் செய்யத் தயங்காதவர் கருணாநிதி. அவர் மூச்சுக்கு முந்நூறு முறை பெரியாரையும், அண்ணாவையும் துணைக்கு இழத்துக் கொள்வார். அந்தப் பெரியாரை மட்டும் கருணாநிதி விட்டா வைத்தார்?

பெரியாரின் திகவிலிருந்து திமுக பிரிந்துவிட்டது. 1966ம் வருடம் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர். அப்போது சட்டமன்றத்திலே மதியழகன் போலீஸ் மானியத்தின் மீது ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வருகிறார். அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் திரு எம்.பக்தவத்சலம். அந்த வெட்டு தீர்மானத்தின் மீது 11.03.1966 அன்று சட்டமன்றத்திலே பேசியதன் சுருக்கம் இதுதான் :

நண்பர் திரு மதியழகன் அவர்கள் பாதுகாப்புச் சட்டதைப் பற்றி சொன்னார்கள். பத்திரிகைகள் மீது பாதுகாப்புச் சட்டம் – எழதினால், பேசினால் – முரசொலி, மாலைமணி ஆகியவற்றின் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதைப் படித்த பிறகு கனம் அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது. தலைப்பு “ கம்யூனிஸ்டுகளும் நானும்’ என்பதாகும்.

“ நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால் நான் ரஷ்யக்காரனை ஆதரித்து சுட்டுக் கொல்லப்படவோ அல்லது இந்நட்டுச் சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே யொழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன். இத்தனைக்கும் நான் ஒன்பதுமாற்றுக் கம்யூனிசக்க்காரனுமல்ல ”. இத்தனையும் நான் எழதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்ல, பாலவனக் கோட்டைக்கே அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றாக் கழகத்தினர் அத்தனைபேர்களையும் கண்காணாத தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.எழதியது யார் ? “ நாளைக்கு ரஷ்யாகாரன் படையெடுத்தால், நான் ரஷ்யாக்காரனை ஆதரித்து சுட்டுக்க் கொல்லப்படவோ அல்லது இந்நாட்டுச் சிறையில் இருக்கவே விரும்புவேனே தவிர இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்கச் சம்மதிக்க மாட்டேன்’ என்று எழடியவர் – எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது – இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்ற பெரியார் திரு ஈ.வெ.ரா அவர்கள் 5.2.1966 “விடுதலை’ பத்திரிகையில் எழதியிருக்கிறார். பாதுகாப்புச் சட்டம் எங்கே போயிற்று ? பாதுகாப்புச் சட்டம் பெரியார் என்ற பெயரைக் கண்டவுடனே மழங்கிவிட்டதா ? அவர் காலடியில் மண்டியிட்டுவிட்டதா ?

——– தேர்தலில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்படிருக்கிறாதே தவிர வேறில்லை என்று பதில் கூறியிருக்கலாம்.

கேவலம் சில பல வோட்டுகளுக்காக இந்தை நிலைக்குப் போய்விட்டார்களே என்று கவலை தெரிவித்து இதற்கு மேல் பேச விரும்பாமல் என் உரையை முடிக்கிறேன் வணக்கம்.

இதுதான் கருணாநிதியின் சட்டமன்ற உரையின் சாராம்சம். இப்போது கலைஞர் சட்டமன்ற உரைகள் அனைத்தும் 11 தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது. அதில் 3 வது தொகுப்பில் 57ம் பக்கத்தில்தான் பெரியாரின் பரம் சீட்ர் கருணாநிதி பேசியது பதிவாகியிருக்கிறது.

Share

Filed under: Tamil

Trackback Uri






15 Mar 11

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நட்டத்துவதற்காக தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.எம். குரேஷி சென்னைக்கு வந்திருந்தார்.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரையும் அழைத்து அவர் தலைமையிலான குழ ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், தலைமை நிலைய செயலாளர் கிரிராஜ்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

`சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தை தேர்தலுக்காக எடுத்துச் செல்லுகிறார்கள் என்று கருதி,அந்தப் பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். காங்கேயத்தில் இருந்து கோவைக்கு பணம் எடுத்துச் சென்ற தேங்காய் வியாபாரியிடம் தேர்தலுக்கு பணம் கொண்டு போவதாகச் சொல்லி அதிகாரிகள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரீல் `பெட் சீட்’ த்யாரிப்பு குடிசை தொழிலாக நடந்து வருகிறது. அந்த வியாபாரிகள் 20 பேர் அல்லது 30 பேர் சேர்ந்து தங்கள் தயாரித்த `பெட் சீட்’டுகளை விற்பனை செய்வதற்காக லாரிகளில் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட `பெட் சீட்’டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் இந்த செயல் அபத்தமானது. வியாபாரி. விவசாயிகளிடம் பணத்தை பறிமுதல் செய்தால் தகராறு ஏற்பட்டு, சட்டம் ஒழங்கு பிரச்னைதான் ஏற்படும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன் மூலம் பாலு என்ன சொல்ல வருகிறார் ? இப்படி நாங்கள் வேறு வழிகளில் பணம் எடுத்துச் செல்வதை போலீஸ் தடுத்தால் எங்கள் திமுக தொண்டர்க்ள் கொதித்து எழவார்கள். சட்டம்- ஒழங்கை நிலை குலையச் செய்து விடுவோம் என்று தேர்தல் ஆணையத்திற்கு சொல்வதன் மூலமாக எச்சரிக்கை விடுக்கிறாரா ?

அல்லது திமுக எந்த முறையிலெல்லாம், பணத்தை தொகுதிகளுக்கு கொண்டு போகிறது என்பதற்கு உதாரணமாக இந்த தேங்காய், பெட் சீட் வியாபார்கள் விஷயத்தை பூடகமாக போட்டு உடைக்கிறாரா ?

நம்முடைய இந்த இரண்டு கேள்விகளில் இப்போது முதல் கேள்வியைக்
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். ஒரு நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை வாகனங்கள் போகிறது. அதில் தனியார் வாகனங்கள், டூரிஸ்ட் கார்கள், லாரிகள், கனரக வாகனங்கள். அரசுப் பேருந்துகள் என்று பலவிதமான வாகனங்கள் செல்கிறது. இதில் எத்தனை பேர் வியாபாரிகள்? அதில் எத்தனை வியாபாரிகள் கத்தை கத்தையாக பணத்தை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.?

இப்போது பணப்பட்டுவாடாவிற்கு பணத்தை ரொக்கமாக கையில் எடுத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமேயில்லை.காங்கேயம் வங்கி கிளையில் பணத்தை செலுத்தினால், கோவை கிளையில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுவெல்லாம் நம்மை விட வியாபாரிகளுக்கு நன்றாகவே தெரியும். சரி, `பெட் சீட்’ விவகாரத்திற்கு வருவோம்.அதற்கான முறையான காகிதங்கள் இருந்தால் ஏன் பிடிக்கப்போகிறார்கள்?

வங்கி ஏடிஎம்களுக்கு போகிற பணத்தையே உரிய தஸ்தாவேஜீகள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஒரு வங்கிக் கிளையிலிருந்து ஏடிஎம்களுக்கு போகிற பணத்திற்கு உரிய காகிதங்களை கொடுக்காதது யாருடைய தவறு ?

தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளுக்கு பால பாடம் கற்க வேண்டுமானால் அறிவாலயத்திற்கு போகலாம் என்று பேரக் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் படிப்ப்றிவில்லாத பாட்டிகளுக்குக் கூட தெரியும்.

இப்போது தேர்தல் காலத்து பண பரிவர்த்தனை முறைக்கு உங்கள் கட்சி ஒரு பல்கலைக் கழகமே துவங்கி பாடம் நடத்தி பட்டமே கொடுக்கலாம். தேங்காய் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர்கள், பெட்ரோல் வாகனங்கள் என்று இப்படி பல வழிகளில் எங்கள் கட்சி பணத்தை கொண்டு செல்கிறது என்ற் உங்கள் கட்சியை, சென்னை மொழியில் சொல்ல வேண்டுமானால் `போட்டு’ கொடுத்து விட்டிர்களோ ?

ஜவுளி வண்டிகளை காவல்துறையினர் பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் உங்கள் தயாநிதி மாறன் தானே? மத்திய அதிகார மிரட்டலோடு ஜவுளிகள் மூலமாக
நீங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் கொண்டு செல்லலாமே? வியாபாரிகளை மிரட்டும் வித்தை உங்களுக்கு தெரியாதா ? காங்கேயத்திலிருக்கிற மொத்த ஜவுளிக் கடையிலிருந்து கோவையிலிருக்கு சில்லறைக்கு கடைக்கு சரக்குகளை அனுப்பிவிட்டு, அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை உங்கள் கோவைக் கட்சிக்காரர்கள் வாங்கி கோவை வாக்காளர்களுக்கு கொடுக்க முடியாதா என்ன ?

சட்டம்- ஒழங்கு சீர் குலையும் என்கிறீர்களே? எத்தனை லட்சம் வியாபாரிகள் தினமும் சாலை வழியாக பணத்தையும், பொருடகளையும் கொண்டு செல்கிறார்கள். தமிழகத்தில் உங்கள் ஆட்சி நடக்கிறது. சட்டம்-ஒழங்கை பாதுகாக்க வேண்டியது உங்கள் அரசின் பொறுப்பு. ஆனால் தேர்தல் விதிமுறைகளால் உங்கள் விசுவாசத்திற்குரிய காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுவிட்டன். அவர்கள் மூலமாக சுலபமாக, இடைத்தேர்தல்கள் போல உங்களால காரியத்தை சாதித்துக் கொள்ள முடியவில்லை. இந்த கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அப்படியானால் சட்டம்- ஒழங்கை பாதுகாக்க உங்கள் அரசினால் முடியவில்லை என்றால் மத்திய அரசு உங்கள் ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தல் வரை தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம் என்கீறீர்களா ?

உங்களுக்கு இந்த முறை மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தஞ்சை வடசேரியில் உங்கள் தொழிற்சாலைக்கு அந்தப் பகுதி மக்கள் முட்டுக்கட்டைப் போட்டார்கள். அதற்கு உங்கள் தமிழக அரசு உங்களுக்கு உரிய உதவியை செய்யவில்லை என்கிற வருத்தங்கள் உங்களுக்கு இருப்பது, உங்களைப் பொருத்தவரையில் நியாயமான விஷயம் தான். அதற்காக் தேர்தல் கமிஷனிடம் போய் உங்கள் ` எட்டப்ப’ வேலையைக் காட்டியிருக்க வேண்டாம்.

உங்களுடை இந்த செயல் எனக்கு கட்டபொம்மன் வசனத்தைத்தான் நினைவு படுத்துகிறது”

`எட்டப்பா ! ஈனச் சொல் பேசாதே. வாழ விரும்பினாய். இனி நீ வாழ்ந்து கொள். வீணனை வணங்கினாய் வேண்டியதை வாங்கிக் கொள். கூலி கேட்டாய். கும்பிட்டாய். கோழையானாய், கூலியைப் பெற்றுக்கொள். ஆனால் தேர்தல் கமிஷன் உன்னைப் போற்றவேண்டும் அது உனக்கு இனிக்க வேண்டுமென்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக் கொடுத்தாய் நான் காட்டிக் கொடுக்கப் பட்டேன்’ இப்படி கட்டபொம்மன் வசனத்தை மாற்றி பேசும்படி செய்துவிட்டீர்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.
Share

Filed under: Tamil

Trackback Uri






14 Mar 11

உங்கள் இணைய தள பதிவுகள் திமுக எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக தலைதூக்குகிறதே என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கான

விளக்கமாக இன்றைய பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

2 ஜி பூதம் இப்போது விசுவருபமெடுத்து திமுகவை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. தங்கள் ஐந்தாண்டு கால சாதனைகளை முன்னிறுத்தி வெற்றி பெறவேண்டும் என்பது திமுகவின் ஒரு தேர்தல் வியூகம்.

அதற்காக முதல்வர் தினமும் முரசொலியில் பல்வேறு துறைகளின் சாதனைகள் குறித்து தொடர்ந்து எழதி வருகிறார். அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களோடு!.

புள்ளிவிவரங்களை இந்த தேர்தல் பரபரப்பில் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

அவர்களின் சாதனைகளை பூதாகரப்படுத்த அவர்களுக்கு ஏராளமான தொலைக்காட்சி சானல்கள் உண்டு. அதன் மூலம் தமிழக வாக்காளர்களை `மூளைச் சலவை’ செய்து விடலாம் என்று அவர் நினைக்கிறார்.

அதுவும் திமுக இம்முறை குறிவைத்திருப்பது கிராமப்புற பாமர வாக்காளர்களைத்தான். அதற்கு அடையாளமாக ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் என்கிற மாபெரும் மக்கள் சக்தியை சென்னை நகரில் பல தொகுதிகளில் தோற்கடித்தது திமுக. இப்போது அந்தக் கோட்டையை விட்டு ஒடப் பார்க்கிறது.

சென்னை நகரில் படித்தவர்கள் அதிகம். அவர்களுக்கு இந்த 2ஜி விவகாரம், 1,76,0000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு என்பது தெரியும் . அதனால் தான் கிராமங்களை நோக்கி ஒடுகிறது திமுக.

ஒடுவதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள். ஒன்று அவர்களது கண்டுபிடிப்பான `திருமங்கலம் தேர்தல் ஃபார்முலா’. அரசியல் விஞ்ஞானி அழகிரியின் அற்புத கண்டுபிடிப்பு. வாக்குகளை வாங்கிக்கொடுக்கும் அலாவூதினின் அற்புத பூதம்.இரண்டாவது அவர்களது இலவசங்கள்.

முதல் திட்டம் பொதுத் தேர்தலில் போணியாகாது என்பதற்கு உதாரணம் பெண்ணாகரத்தில் நடந்த இடைத் தேர்தல். அந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானது. திமுக இந்த தேர்தலில் குடும்பத்திற்கு 10,000 வரை கொடுத்தது என்றெல்லாம் அப்போது செய்திகள் வந்தது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனாலும். தனியாக நின்று எதிர்க்கட்சிகளான பா.ம.க. தேமுதிக. அதிமுக வாக்குளை கூட்டினால் திமுகவை விட அதிகம்.

அதாவது பணத்தையும் வாங்கிக்கொண்டு மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

காசு வாங்கிய மக்கள் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை வாக்குக்கு பணம் கொடுக்கிற கட்சிகளுக்கு உண்டு. ஆனால் அந்த காலம் மலையேறிவிட்டது. திமுக அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சிகளின் மூலமாகவே பாமர வாக்காளருக்குக் கூட தெளிவு வந்துவிட்டது’

வீட்டிலிருந்து காசைக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. நம் பணத்தை அடித்து நம்மிடமே கொடுக்கிறார்கள் என்கிற தெளிவு ஒரளவு வந்துவிட்டது.

அடுத்து இவர்களது இலவச திட்டங்கள். அதன் நிலை என்ன தெரியுமா ? `இனிக்கிறது என்பதால் துப்பவும் முடியாமல், கசக்கிறது என்பதால் விழங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கசப்பு அதிகமாகவே இருப்பதாக உணர ஆரம்பித்துவிட்டார்கள்.

உணர்த்தியது கலைஞரின் குடும்ப ஆதிக்கம். தொழில் செய்வோர் ஒவ்வொருவரும் இனி நம் தொழில் நம் வசம் இருக்குமா கலைஞர் குடும்பம்
அதிகார பலத்தோடு பிடுங்கிக் கொள்ளுமா என்கிற பயம் வந்துவிட்டது.

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொபைல் போன், விமான போக்குவரத்து,தனியார் பொறியியற்,மருத்துவக் கல்லூரிகள், மதுபானத் தயாரிப்பு தொழிற்சாலைகள்.நில உடைமை தொழில்களிலும் குடும்பத்தினர் புகுந்துவிட்டார்கள்.

தொழில்துறையில் இந்த குடும்பத்திற்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தவர் முரசொலி மாறனின் புதல்வர்கள் கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும்தான்
அதன் பூர்வ கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1992ம் வருட காலங்களில் சாடிலைட் தொலைக்காட்சி என்கிற தொழில் நுட்பம் சந்தர்ப்ப வசத்தால் கலாநிதி மாறனிடம் வந்தது. அப்போது அவர்கள் பூமாலை விடியோ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார்கள்.அது அவர்களின் குங்குமம் பத்திரிகையின் ஒரு பகுதியாக இருந்தது.

அப்போது அந்தத் தொழில் துவங்க அவர்களுக்கு மூதலீடு தேவைப்பட்டது. அதற்காக திமுக கட்சி நிதி ( இது எத்தனை கழக உடன்பிறப்புகளுக்கு தெரியும் என்பது தெரியாது) வங்கிக்கு செக்யூரிட்டி டெபாசிட்டாக கொடுத்துத்தான் வங்கியில் கடன் வாங்கினார்கள். கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் மாடிப் பகுதியை அவர்களுக்கு கொடுத்தனர். அதற்கு சன் டிவி கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.

தொலைக்காட்சி துவங்கியவுடன் அதன் அதிபர் போட்ட முதல் உத்தரவு
கழக கரை வேட்டி கட்டிய யாரும் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான் என்று அப்போதே செய்திகள் கசிய ஆரம்பித்தது.

அரசியல் பலம், திமுக தலைவர் தாத்தா கலைஞரின் ஆசி, முதல் தனியார் சேனல் என்று மக்களிடையே ஏற்பட்ட பிரமிப்பு, அதன் வளர்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்ட பிரபலங்கள் மூலமாக அசுர வளர்ச்சி பெற்றார்கள்.

தமிழ் திரைப்பட உலகின் மீதான் இவர்களின் தாக்குதல் அப்போதே மெதுவாகத் துவங்கிவிட்டது. ஊடகம் என்பது மக்களைச் சென்றடைவது, அதை குடும்பத்தினர் பார்க்கிறார்கள் அதனால் கொடுக்கிற நிகழ்ச்சியில்
பொழதுபோக்கும் இருக்க வேண்டும், அதே சமயம் நமக்கும் ஒரு சமூக பொறுப்பிருக்கிறது. அதனால் தரமான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டுமென்கிற அக்கறை எப்போதுமே அவர்களுக்கு இருந்ததில்லை.
இவர்கள் வெற்றி பெற்றார்கள். இவர்களின் வெற்றி ஃபார்மூலாவை
மற்ற தொலைக்காட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் ஆண்களுக்கு டாஸ்மாக். பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் சினிமா, மற்றும் ஒப்பாரி தொடர்கள். இதனால் பல குடும்ப பெண்கள் மன நோயாளிகள் ஆனார்கள். தொடர்களில் வரும் குடும்ப பெண்கள் பெரும்பாலும்
ஒழக்கமற்ற பெண்களாகவே இருந்தார்கள். பண்டிகை காலங்களில் சினிமாவைத் தவிர வேறு எதையுமே தமிழன் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.குழந்தைகளை கூட சினிமாப் பாட்டிற்கு ஆபாச நடனம் ஆட வைத்தார்கள்.

சாம்ராஜ்யம் விரிந்து பரந்து போது, இந்த தொலைக்காட்சிகளின் வினியோக
தளமான கேபிள் இணைப்புத் தொழிலையும் இவர்களே எடுத்துக்கொண்டார்கள். இவர்கள் தயவின்றி யாரும் தொலைக்காட்சி துவங்கிவிட முடியாது. அவர்களின் ஆதிக்கம் பரவ ஆரம்பித்தது. அரசீயல் கட்சிகளின் சேனல்கள்,தேசிய உலக அளவிலான சேனல்களில் காணப்படும் தெளிவு, சின்ன சேனல்களான தமிழன், இமயம், வின் டிவிகளுக்கு கிடையாது.
இந்த சின்ன சேனல்கள் தெளிவாக தெரியவேண்டுமானால் அவர்கள் அவ்வப்போது நிர்ணயிக்கிற தொகையை கொடுத்தாக வேண்டும்.

இந்த நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் மற்ற மாநிலங்களில் சேனல் துவங்கலாம். நியாயமான கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் இந்த சேனல் சர்வாதிகாரிகளுக்கு
தொழில் தர்மம் என்பதே கெட்ட வார்த்தை.

அடுத்து நாளிதழும் அவர்கள் கையில் வந்தது. இதில் முளைத்தது குடும்பச் சண்டை. அதில் விளைவு இவர்களின் தினகரன் நாளிதழில் பணிபுரிந்த ஊழியர்கள் கொலையுண்டார்கள். குடும்பம் பிரிந்தது. கலைஞர் சேனல் என்று
கலைஞரின் குடும்பத்தினருக்காக ஒரு சேனல் துவங்கப்பட்டது.

சண்டையின் போது தன் பிள்ளைகளுக்கு எதிரியாகிவிட்ட பேரன்களின் கேபிள் ஆதிக்கத்தை முறியடிக்க அரசு கேபிள் துவங்கப்போவதாக அறிவித்தது அரசு.அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிதான் உமா சங்கர். குடும்பம் இணைந்த பிறகு அரசு கேபிள் திட்டமும், அதற்காக அரசு செலவழித்த பணமும் குப்பைக்கு போனது. பின்னர் அதில் நியாயம் கேட்ட
அதிகாரி உமா சங்கர் என்ன பாடுபட்டாரென்பது நாடறிந்த கதை.

சரி, கலைஞர் ஒரு இலக்கியவாதி . அவர் பெயரால் துவங்கப்படும் சேனலில் நல்ல தரமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும்
பொய்த்துப் போனது. ஆரம்பத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கலைஞரே தேர்ந்தெடுத்தார். அதில் மிகப்பிரபலமானது மானாட மயிலாட நிகழ்ச்சி. அதாவது முன்பெல்லாம் கிராமங்களில் பொருட்காட்சி, திருவிழாக்களில் ஆபாச ரெகார்ட் டான்ஸ் நடக்கும். அதையே தொழில்நுட்பத்தோடு, திரையுலக
பிரபலங்களை வைத்து சின்னத்திரைக்கு கொண்டு வந்தார்கள். இந்த அதி நவீன ரெகார்ட் டான்ஸ்தான் தனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று பறைசாற்றி தன் `ரசனை’யின் மேன்மையை வெளிப்படுத்தினார் முதல்வ்ர்.

இந்த சேனல் போட்டி பல ரூபங்களில் வெளிப்பட்டது. சேனல் மூலமாக இந்தியாவின் மிகச் சில கோடிஸ்வரர்களில் ஒருவரானார் அதன் அதிபர் கலாநிதி மாறன். அவருடைய தொழில் பல்வேறு தளங்களில் விரிந்து பரந்தது.

அதே பாணியில் குடும்பத்தினர் அனைவரும் களத்தில் இறங்கினார்கள்.விளைவு இன்று பல தொழில்கள் அவர்களின் கையில்தான்.லாபகரமான தொழில்கள் எல்லாமே தங்களுக்கு வேண்டுமென்கிற வெறி குடும்பத்தினருக்கு வந்துவிட்டது.

மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழர்கள் பலரும் வேறு மாநிலத்திற்கு புலம் பெயர வேண்டியதுதான். முன்பு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவை கைப்பற்றினான்.

தமிழகத்தை கைப்பற்ற ஆரம்பித்திருக்கும் நவீன கிழக்கிந்திய கம்பெனிதான் கலைஞர் குடும்பம்.அதனால் இந்த தேர்தல் தமிழகத்திற்கான ஒரு சுதந்திர போராட்டம் என்பதுதான் உண்மை. புரிந்து கொள்வார்களா தமிழர்கள்.

Share

Filed under: Tamil

Trackback Uri






11 Mar 11

என்ன ஆகும் என்கிற கவலை இருந்தது.தமிழகத்தில் நாடாளும் கோமான்களும், நாயன்மார்களும் கூட்டணி அமைத்து, தொகுதிகளை முடிவு செய்து, மனமொத்த`தம்பதி’களாய் வீதி உலா வரும்போது அது நடந்து விடக்கூடாதே என்று பயந்திருந்தேன்.

பயந்தது நடந்துவிட்டது.சீர் குலைக்க வந்துவிட்டது சிபிஐ. நாய்ன்மார்கள் பேச்சுவார்த்தை முடிவதற்குள், அறிவாலயத்திற்குள் கலைஞரின் அன்பாலயங்களான மனைவி தயாளு அம்மாளையும், மகள் கனிமொழியையும் விசாரிக்க சிபிஐ நுழைந்துவிட்டது,.

மார்ச் 8 ந்தேதி டெல்லியில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபின் திமுக மீதான `2ஜி புகழ்’ பிரசாரம் சற்று மந்தமாகவே இருந்தது. சிபிஐ இந்த இரண்டு பெண்மணிகளையும் விசாரிக்க வந்தவுடன் மீண்டும் அகில இந்தியாவின் கவனத்திற்கு அறிவாலயத்தை கொண்டு சென்றன ஊடகங்கள்.

இன்று இரண்டு செய்திகள்தான் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றன.

ஜப்பானில் சுனாமி

தமிழகத்தில் பினாமி

இந்த விசாரணை, அதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப் பதிவு வரப்போகும் நாட்களின் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்தாலே கலக்கமாயிருக்கிறது.

திமுக- காங் உறவு இம்முறை கட்டாயக் கல்யாணம் வேறு. என்னால் ப்ழங்கதைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நினைத்துப் பார்த்தால் திமுக காங்கிரஸ் உறவு பற்றி இளைஞர் காங்கிரஸிற்கு ஒரு கையேடு தயாரித்துக் கொடுத்தாலென்ன என்று கூட தோன்றுகிறது.

1967க்கு முன்பு திமுக குறிப்பாக இன்றைய தலைவர் கலைஞர் பேசிய பேச்சுகளை இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பதவி சுகத்திற்காக மறந்து போயிருப்பார்கள். குறிப்பாக தமிழக காங்கிரஸில் பலம் வாய்ந்த சக்தியாக திகழம் ஜி.கே. வாசன் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதைய தஞ்சை மாவட்டத்தைப் பற்றி திமுக என்ன சொன்னது ?

தஞ்சையை ஆள்வது யார் ? காங்கிரஸா ? இல்லை சில பணக்காரர்கள் மட்டுமே

தஞ்சையை ஆள்வது பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் (ஜி.கே. வாசனின் தந்தை) வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர் தானே ! என்றார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதே பஸ் முதலாளிகளின் தயவில் என்றார்கள். இது தவிர பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தரக்குறைவான விமர்சனங்கள்.

இந்த காலக் கட்டத்தில்தான் எழத்தாளர் ஜெயகாந்தன் போன்றவர்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது அவர் கம்யூனிச அனுதாபியாக இருந்தார். இப்போது திமுகவில் முயல்குட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

1972 ம் ஆண்டு அப்போது திமுகவின் தலைவர் கலைஞர்தான். துக்ளக் வார இதழில் ஜெயகாந்தன் ஒரு தொடர் எழதினார். அதன் தலைப்பு ` ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’. பின்னர் புத்தகமாக வெளிவந்து அது இப்போதும் கடைகளில் கிடைக்கிறது. அதில் திமுகவைப் பற்றி அவர் சொன்னவை சிலவற்றை இங்கே தருகிறேன். அது இன்றைக்கு அந்த கட்சிக்கு பொருந்தாது என்று அவர்களோடு இருக்கும் ஜெயகாந்தன் நினைக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்க போகும் வாக்காளர்கள்தான் ஜெயகாந்தன் திமுகவைப் பற்றி செய்த விமர்சனங்கள் சரியா தவறா என்று சொல்லவேண்டும் .

`திமுகவினர் தங்களை அரசியல்வாதிகள் என்று அக்காலத்தில் சொல்லிக்கொள்ளவேயில்லை. இவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும், கலைஞர்கள் என்று,சிந்தனாவாதிகள் என்றும் பாமரர்கள் மத்தியில் கூறிக்கொண்ட போது, கற்றவர்களும், பண்டிதர்களும், அரசியல் அறிஞகளும்,கல்வியாளர்களும் இவர்களை மிகவும் அலட்சியமாகவும்,ஏளனமாகவும் சிரித்தும் அருவருத்தும் பேசினார்கள். (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் பக்கம் 65)

திராவிட நாடு, தமிழ், தமிழர், பார்ப்பன் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, அரைவேக்காட்டு நாத்திகவாதன்ம், `ஸீடோ’ சோஷலிஸவாதம், வறுமை வர்ணனை, காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர்-தென்னவர் பேதம், சினிமா நாடக மோகம் போன்றவற்றை நம்பி இயக்கம் நடத்திய திமுகவினரின் கூட்டங்களுக்கு அப்போது கும்பல் சேர்ந்தது. இவர்களும் அவர்களின் ரசனைக்கேற்ப வித்தை காட்டினார்கள்; மகிழ்வூட்டினார்கள்.(பக்கம் 66)

அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் அரசியலை `ஸைடு’ பிசினஸாகவே வைத்திருந்தார்கள். அதன் முக்கிய தலைவர்கள் சினிமா கதைகளிலும்,சீட்டு விளையாட்டிலும், சில்லறை ரஸானுபவங்களிலும் திளைத்துக்கொண்டிந்தார்கள் என்பதனை அவர்களது அந்தக் கால்ப் பேச்சும் எழத்தும் மக்களுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தன் (பக்கம் 89)

தி.மு. கழகமென்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல. அது மனித மரியாதைகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், இந்திய நாகரீகத்திற்கும் நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கிற ஒர் பேரழிசின் அறிகுறி (a social cultural menace) (பக்கம் 127)

மக்களுடைய பலவீனமும் அறியாமையுமே திமுகழகத்தின் மூலதனம். பலம் (பக்கம் 146)

தமிழ்க் கலையுலக அறிவியல் உலகில் ஏற்கெனவே ஏற்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவின் விளைவே திமுகழகம் என்பது எனக்குப் புரிந்தது. (பக்கம் 152)

இந்த அசூர வளர்ச்சியை தடுக்கிற யோசனையே காங்கிரஸிற்கு இல்லாமல் போய்விட்டது என்பதும் ஜெயகாந்தனின் ஆதங்கம். 1967ல் இங்கே குப்புற விழந்தது காங்கிரஸ். சென்ற தேர்தல்வரையில் இரு திராவிட கட்சிகளுக்கும் பல்லக்கு தூக்கியாகவே இருந்துவிட்டது. இந்த முறைதான், நாங்கள் பல்லக்குத் தூக்கிகள் இல்லை. நீங்கள் மூலவர், நாங்கள் உற்சவர்கள் என்று தாங்களும் பல்லக்கில் ஏற முனைந்திருக்கிறார்கள். ஆனால் பாவம் காங்கிரஸிற்கு பல்லக்குத் தூக்கிகள்தான் இல்லை. திமுக தொண்டர்கள்தான் தூக்க வேண்டும்’ அவர்கள் உற்சவர்களை கரை சேர்ப்பார்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்குறி !

`இதை எழதி முடிக்கும்போது எங்கோ வானொலியில் ` யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அண்டைக்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே’ பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறது.!
Share

Filed under: Tamil

Trackback Uri






10 Mar 11

மிரட்டல், உருட்டல் நாடகங்கள் முடிந்து 63 நாயன்மார்கள் – அறுபத்திமூவர் திருவிழா காங்கிரஸில் துவங்கிவிடும். காங்கிரஸ் தங்களுடன் இருப்பதினால் திமுக தலைமை இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்.

இங்கே திமுக காங்கிரஸிலிருந்து விலகல் நாடகத்தை மார்ச் 6ந் தேதி அரங்கேற்றியதுமே தில்லியில் தங்கள் நாடகத்திற்கு கதை வசனத்தை காங்கிரஸ் ஒரே நாளில் அதாவது மார்ச் 7 ந்தேதி எழதி முடித்துவிட்டது. மார்ச் 8 ந்தேதி மகளிர் தினம் உண்மையில் சோனியாவின் தினம்தான். வீராவேசமாக கிளம்பிய கழக கண்மணிகளை, கலைஞர் குடும்பத்து பொன்மணிகளை தில்லி வீதியில் பீதியோடு அலையவிட்டது காங்கிரஸ்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிற கதையோடு கேட்ட இடத்திற்கு ஒப்புக் கொண்டு அறுபத்தி மூன்று நாயன்மார்களை சென்னையில் வரவேற்க சேக்கிழார் பிரான் கருணாந்தி உத்தரவிட்டார். இந்த `பெரிய புராண’ காலட்சேபங்கள் இரண்டு நாட்களில் முடிந்தது.

இந்த இரண்டு நாட்களும் டெல்லி ஊடகங்கள், திமுக – காங்கிரஸ் மோதல்கள் எத்தனை இடங்களுக்காக என்பதில் இல்லை. கருணாநிதி குடும்பத்தினர் மீது சிபிஐ பாயக்கூடாது என்பதற்காகத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

ஆனால் அங்கே திகார் சிறையில் `கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை; அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை. சிறைச்சாலை ஒரு கல்லூரி’ என்று பழைய சினிமா பாடலை முணுமுணுத்து புலம்பிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆ. ராசா. அந்த தலித் இளைஞன் தன்னந்தனியாக தவிப்பதைப் பற்றி இப்போது திமுக தலைவருக்கே மறந்துவிட்டது. ராசா என்ன கட்சிக்காக கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு தியாக மறவராக சிறையில் இருக்கிறாரா? அல்லது இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழித்து விட்ட காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திமுக- காங்கிரஸின் முற்போக்கு ஜனநாயக கூட்டணியை எதிர்த்து சிறைக்கு போயிருக்கிறாரா?

அலைக் கற்றைகள் மூலமாக கற்றையாக வாங்கி தலைவர் குடும்பத்திற்கு அர்பணித்த தொண்டன் அங்கே சிறையில் வாடுகிறார். கலைஞர் குடும்பத்தினர் மீது 2 ஜீ கறை படியக் கூடாது என்று கவலைப்பட்ட திமுக தலைமை, ராசா மீது தேசீய பாதுகாப்பு சட்டம் பாயக்கூடாது என்கிற குரலை எழப்பியதாகக் கூட பேச்சில்லை.

திமுகவைப் பொறுத்தவரையில் இனி 2 ஜி அடுத்தபடியான அலர்ஜி ` ராசா’ என்கிற பெயர்தான். இனி ராசாவுக்கு என்ன ஆகும்? என்று கவலைப்பட வேண்டியது அவரது குடும்பத்தினர்தான்.

நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்த நேரமிது. பிரிட்டானிய பிஸ்கெட் கம்பெனி அதிபர் ராஜன் பிள்ளை திகார் சிறையிலிருந்தார். அவரை பொருளாதார குற்றத்திற்காக சிங்கப்பூர் அரசு அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. அவர் இங்கே சிறையிலிருக்கிறார் என்றதும் அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்கப்பூர் அரசு, இந்திய அரசை கேட்டது. இந்த கோரிக்கை வந்த அடுத்த நாளே ராஜன் பிள்ளை இறந்துவிட்டதாக, அவரது மரணச் சான்றிதழ் தான் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது அந்த `ஆண்டவனுக்கே’ (நான் அன்று நாட்டை ஆண்டவரை சொல்லவில்லை) எல்லாம் வல்ல இறைவனைச் சொல்கிறேன்.

ராஜன் பிள்ளை, ராசா இந்த பெயர் ஒற்றுமை ஏதோ என் மனதில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. ஏன் என்று எனக்கே புரியாத மர்ம புதிராக இருக்கிறது.
Share

Filed under: Tamil

Trackback Uri






9 Mar 11

`நான் குடும்பம் என்று கருதுவதும் என்னையும் ஒரு அங்கமாகப் பிணைத்துக்கொண்டிருப்பதும் இந்த இயக்கம் ஒன்றைத்தானே தவிர வேறில்லை’ (கலைஞரின் சுயசரிதை `நெஞ்சுக்கு நீதி’ இரண்டாம் பாகம் பக்கம் 1)

இந்த சுயசரிதை வெளியானது 1987ம் வருடம். 24 ஆண்டுகள் ஓடிவிட்டது. காலமும், கட்டாயமும் பல மாய ஜாலங்களை செய்துவிட்டது. இப்போது இயக்கத்தையே தன் குடும்பமாக்கி, அதை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் கலைஞர். திமுகழகத்தின் ` சரணாகதி படலம்’ மார்ச் 8 ந்தேதி மகளிர் தினத்தன்று டெல்லியில் அரங்கேறிவிட்டது.

இது கலைஞரின் ராஜதந்திரம் என்கிறார்கள் அப்பாவி கழக கண்மணிகள். எதற்காக இந்த ராஜதந்திரம்? கட்சியின் நலனுக்காகவா? உச்ச நீதிமன்ற உத்திரவினால் துரத்தும் சிபிஐ விசாரணைக்காகவா? சீறும் சிபிஐதான் இந்த சரணாகதிக்கு காரணம் என்பது இந்தியத் திருநாட்டிற்கே தெரியும். மேலும் காங்கிரஸ் தயவில்லாமல் தேர்தலில் திமுக `திருமங்கல’ வேலைகளை களத்தில் செய்ய முடியாது.

60 இடங்கள் கொடுக்க ஒப்புக்கொண்டோம். அதற்கு பிறகு மீண்டும் 63 இடங்கள் வேண்டுமென்றும், அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகள் வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது எந்த வகையில் நியாயம்? திமுகவின் உயர் மட்டக்குழ கூடி முடிவெடுக்கும்.

இப்படி அறிவித்துவிட்டு, மார்ச் 6 ந்தேதி காங்கிரஸோடு தன் உறவை முறித்துக்கொண்டது திமுக.மத்திய அரசிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்து, அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தோடு டெல்லி செல்வார்கள் என்றும் அறிவித்தது.

சென்னையில் `பொறுத்தது போதும் பொங்கியெழ’ என்று வீர வசனம் பேசினார்கள். அமைச்சர்கள் டெல்லி போனதும் ` மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏந்தினேன்’ என்று சோனியாவிடம் மண்டியிட்டதன் பின்னனிதான் என்ன ?

ராஜினாமா கடிதம் கொடுக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று ஒரு காரணம். அன்று அதாவது மார்ச் 7ந்தேதி பிரதமர் நாடாளுமன்றம் வந்தாகவேண்டும். ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தலைவர் தாம்ஸின் நியமனத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார் பிரதமர். அங்கே போய் அவரிடம் ராஜினாம கடிதங்களை கொடுத்துவிட்டுவர வேண்டியதுதானே இந்த தன்மானத் தமிழர்களின் வேலை. அதை விடுத்து ஏன் பிரணாப் முகர்ஜியின் தூதுக்கு மண்டியிட்டார்கள் ? பின்னர் அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் ராஜினாமாவை இருபத்தி நாலு மணி நேரம் ஏன்ஒத்திப்போட்டார்கள். ?

`மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்லுவார்.
தம் மக்கள் நலன் ஒன்றேதான் மனதில் கொள்வார்’ என்று வாலி எம்ஜிஆருக்காக எழதிய பாடல் வரிகள்தான் டெல்லியில் வேலை செய்தது.

அகில் இந்தியாவிலும், ஏன் உலக அளவில் காங்கிரஸை படுகேவலத்தில் தள்ளியது திமுக. அந்தக் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் வைத்துக்கொள்ள `வங்க’ த்து பிரணாப்பிற்கு ஏன் இத்தனை அக்கறை. அங்கேதான் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த பிரணாப் முகர்ஜியின் பழிவாங்கும் படல நாடகம் அரங்கேறியது.

தன் சொந்த மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட கட்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தலைநகர் வந்து ஒட்டிக்கொண்டவர் பிரணாப் முகர்ஜி.இவரால்தான் மம்தா பானர்ஜி காங்கிரஸைவிட்டு வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கி, மேற்கு வங்கத்தில் இன்று காங்கிரஸையே மிரட்டிக்கொண்டிருக்கிறார் மம்தா.`பிரணாப் முகர்ஜி இருக்கும்வரையில் காங்கிரஸ் பக்கம் திரும்பவே மாட்டேன்’ என்று சூளூரைத்தர் மம்தா.

பிரணாப்பிற்கு பிரதமராகும் கனவு உண்டு. அவரது கனவை சுக்குநூறாக்கி மன்மோகனை பிரதமராக்கினார் சோனியா. வஞ்சம் தீர்க்கும் வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருந்தார் பிரணாப்.

இதற்கிடையில் நம் சிவகெங்கை செல்வன் ப. சிதம்பரத்திற்கும், பிரணாப் முகர்ஜிக்கு பனிப் போர் உச்ச கட்டத்திலிருக்கிறது. இந்த போரை பற்றி ` `இந்தியா டுடே’ ஆங்கில இதழ் சென்ற வாரம் அட்டைப் படக் கட்டுரையே வெளியிட்ட்து.சென்னையில் நடந்த திமுக- காங் பேச்சுவார்த்தை முறிவுக்கு காங்கிரஸின் பஞ்ச பண்டவர் குழவிலிருந்த ப.சிதம்பரம்தான் காரணம் என்கிற வதந்தி ஏற்கெனவே உண்டு.

2 ஜி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே முக்கியமான ஆவணங்களை மீடியாக்களுக்கு கசிய விட்டதே பிரதமர் அலுவலகம்தான் என்று வருந்திக் கொண்டிருக்கிறது திமுக. பிரதமரை மாற்றவேண்டும் என்கிற எண்ணமும் திமுகவிற்கு உண்டு. அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், நீங்கள் பிரதமராவதற்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. என்று திமுக பிரணாப்பிற்கு ஆசை காட்டியிருக்கிறது. அதனால் திமுக- காங் கூட்டணியில் பிரணாப்பிற்கு அதிக மோகம்.

ப. சிதம்பரம் – பிரணாப் பனிப்போரில் இருவருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் பார்த்துக்கொண்டார் சோனியா. கூட்டணி நீடிப்பதில் வெற்றி பெற்றார் பிரணாப். அதே சமயம் அதிக இடங்கள் என்கிற ப். சிதம்பரத்தின் உறுதியை நிலை நாட்டி 63 இடங்களை பெற்றுவிட்டது காங்கிரஸ்.இதில் பிரணாப்பும், ப்.சியும் வெற்றி பெற்றார்கள். தமிழ்க காங்கிரஸ் தொண்டர்கள் தோல்வியுற்றார்கள். அவர்கள் விரும்பிய கூட்டணி அமையவில்லை.

கூட்டணி உறுதியான இரவே பிரணாப்பிற்கு நன்றி கடன் செலுத்தியது திமுக எப்படி ? .தாமஸ் விவகாரத்தில் தான் பொறுபேற்பதாக நாடாளுமன்றத்தில் பரிதாபமாக ஒப்புக்கொண்டார் பிரதமர். அப்போது அவருக்கு பக்கத்தில் ஒரு மத்திய அமைச்சர் கூட இல்லை. தன்னந்தனியாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கை குடைந்தெடுத்தார் பாரதீய ஜனதாவின் அருண் ஜேட்லி. பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குற்றவாளியை போல அப்போது நாடாளுமன்றத்தில் காட்சியளித்தார். அதை இரவு முழவதும் பலமுறை சன், மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

கூட்டணி முடிந்தது. வெற்றி நமக்குத்தான் என்று திமுக- காங் இரண்டு கட்சிகளும் வெளியே மார்தட்டிக்கொண்டு பவனி வருகிறது. ஆனால் நடந்திருப்பது ஒரு கட்டாயக் கல்யாணம். கடந்த காலங்களைப் போல இரண்டு கட்சிகளும் மனமொத்த தம்பதிகளாக வீதியில் பவனி வரப்போவதில்லை.

தொகுதிகள் முடிவாகி இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிற நேரத்தில் சிபிஐயின் கிடுக்கிப்பிடிகள் தொடரும். அது கலைஞர் குடும்பத்தின் மீது பாய்ந்தால் திமுக தொண்டர்களின் கோபமெல்லாம் காங்கிரஸ் மீது பாயும். களம் ரண களமாகிற வாய்ப்பும் உண்டு.

தேர்தல் சூடு பிடிக்கும்போது 2 ஜீ விவகாரமும் சூடு பிடிக்கும்.
அது திமுகவை தமிழகத்தில் பாதிக்கும்.காங்கிரஸை அகில இந்தியாவிலும் தாக்கும். அது கேரள, மேற்கு வங்க, ஆசாம் தேர்தல்களிலும் எதிரொலிக்கும். அந்த பயமும் காங்கிரஸிற்கு இல்லாமலில்லை.

காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுப் பெற்றதில் இன்னோரு தந்திரமும் உண்டு. இப்போது திமுக வசமுள்ள தொகுதிகள் 121 மட்டுமே. பெரும்பான்மை பலம் பெற 117 இடங்கள் நிச்சயம் தேவை. 2006 தேர்தலின் போது திமுக ஆட்சியிலில்லை. அதனால் அந்த கட்சிக்கு அப்போட்து எதிர்ப்பு அலை கிடையாது. அப்படி இருந்துமே 90 இடங்களில்தான் திமுக வெற்றி பெற்ற்து.இப்போது திமுக எதீர்ப்பு அலை என்பது அகில இந்திய புகழ் பெற்றுவிட்டது. அதை மீறி எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது பெரும் கேள்விக் குறி. அப்படி ஒரு நிலை வந்தால் திமுக ஆட்சிக்கு வால் பிடிக்காது காங்கிரஸ்.

அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றால் ஆட்சியைப் பிடிக்கிற ஆசை காங்கிரஸிற்கு உண்டு. அதற்கு திமுக நேசக்கரம் நீட்டாவிட்டால், மற்ற கட்சிகளை வளைக்கும் யுக்தி காங்கிரஸிற்கு தெரியும்.

63 இடங்களை காங்கிரஸிற்கு மனமுவந்து கலைஞர் கொடுக்கவில்லை.மிரட்டலுக்கு பணிய வேண்டிய கட்டாயம். தங்கள் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் எத்தனை இட்ங்களில் வெற்றி பெறுகிறது என்பதை விட, எத்தனை இடங்களில் காங்கிரஸை நாம் தோற்கடிக்க முடியும்
என்று திமுக கணக்குப் போட்டு வேலை பார்க்கும். திமுக தொண்டர்கள் பலமில்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற அந்த கட்சிக்கு களப் பணி செய்ய ஆட்கள் கிடையாது.

திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுக இம்முறை அதிகம் கஷ்டப் பட வேண்டியதில்லை. அந்த இரு கட்சிகளுமே அதைப் பார்த்துக் கொள்ளும். மேலே நடக்கும் சதி வேலைகள் தெரியாமல் திரியப் போவது இரு கட்சிகளின் அப்பாவித் தொண்டர்கள்தான்.

தங்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த இந்த இரு கட்சி தொண்டர்களும், இந்த தேர்தலுக்குப் பிறகு நடக்கப்போகும் குடுமிச் சண்டைக்காக பாடுபடப் போகிறார்கள்.

அதற்கு உதாரணம் கலைஞரும், பிர்ணாப்பும் பிரதமரைச் சுற்றி ஒரு சக்ரவியூகம் அமைத்திருக்கிறார்கள். பாரதப்போரில் யுதிஷ்ட்ரன் சக்ரவியூகத்தில் சிக்கிக்கொண்டபோது, அவரை மீட்ட அபிமன்யூ இருந்தான். இப்போது எந்த அபிமன்யூ வரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Share

Filed under: Tamil

Trackback Uri






6 Mar 11

நீர்ப் பாத்திரத்தில் தெரியும் நிலவின் பிம்பத்தை வைத்துக்கொண்டு அதுதான் உண்மையான நிலா’ என்று நம்பி ஏமாந்தான் என்று பாரதத்தில் துரியோதனனை சொல்வார்கள். இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள், அபிமானிகள்.

6.3.2001 ஞாயிற்றுக்கிழமை, பகல் 1.15. நான் இந்த பதிவை செய்யும் நேரம். அதாவது காங்கிரஸுடன் கூட்டணி முறிந்தது என்று திமுக அறிவித்த அடுத்த நாள்.

இன்று காலையிலிருந்தே ஊடகங்கள், ஆர்வலர்கள் எல்லோருமே இன்று மாலை குலாம்நபி ஆசாத்,பிரணாப் முகர்ஜி, அகமது படேல் – அதாவது சோனியாவிற்கு நெருக்கமான மூவரணி சென்னை வருகிறார்கள். கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞர் காலடியில் மண்டியிட்டு அவர் கொடுக்கிற இடங்களை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உள்ளே நடந்தது, நடக்கப்போவது எல்லாமே திகில் நிறைந்தது. திமுக வேண்டாம் என்று காங்கிரஸ் முடிவெடுத்து சில காலங்கள் ஆகிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்து முக்கிய உளவுத்துறை அதிகாரிகள்.

ப.சிதம்பரம் எளிதில் வாய்திறக்க மாட்டார். ராஜதந்திரி. சென்ற வாரம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ` ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும்’ என்று பேசியது பொருள் பொதிந்தது. வருமுன் உரைத்த சங்கேத வார்த்தைகள் என்கிறார்கள்.

63 இடங்களும், இந்த தொகுதிகள்தான் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது என்பது திமுக தலைவரின் கற்பனை என்பதுதான் உயர்மட்ட காங் தரும் ரகசியச் செய்திகள்.

60 இடங்களை காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதே சமயம் எந்த 60 தொகுதிகள் என்பதை சொன்னால், அது குறித்தும் விவாதிக்கலாம் எனறுதான் சொல்லப்பட்டதாம்.அரசியல் பேச்சுவார்த்தை இப்படி போய்க் கொண்டிருக்கும் போது, திமுக வேண்டாம் என்று காங்கிரஸ் முடிவு எடுத்ததற்கு வலுவான காரணம் உண்டு.அது உச்ச நீதீமன்றத்தின் துப்பாக்கி.

வரும் 15ந் தேதிக்குள் 2ஜி அலைக் கற்றை விவகாரத்தில் அதி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிபிஐ. காரணம் உச்ச நீதி மனற உத்தரவு. அந்த நடவடிக்கை கலைஞரின் சிஐடி காலனியில் துவங்கி,கோபாலபுரம் வழியாக, மும்பை தொழிலதிபர் ரத்தன் டாட்டாவைத் தொட்டு, டெல்லி வரை பயணிக்கும். பல கைதுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.

திமுக தரும் இடங்களை பெற்றுக்கொண்டு, களத்தில் இறங்கி மனுத்தாக்கல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் திமுகவில் சில திடுக்கிடும் கைதுகள் நடந்தால் விளைவுகள் என்னவாகும்?

உணர்ச்சி வேகம் கொண்ட திமுக தொண்டனுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவிலதான் இந்த கைதுகள் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதைத் தொடர்ந்து தீக்குளிப்புகள், போராட்டங்கள் வெடிக்கும். அது அத்தனையும் காங்கிரஸுக்கு எதிரான குரோதமாக மாறும். அந்த திமுக தொண்டன் காங் நிற்கும் தொகுதிகளில் எப்படி வேலை செய்வான்.?

காங்கிரஸிலோ களப் பணி ஆற்ற வேண்டிய தொண்டர்களைவிட, தலைவர்கள் தான் அதிகம். அதிலும் கோஷ்டிகளுக்கு கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் திமுகவுடன் களத்தில் இறங்குவது காங்கிரஸுக்கு பெரும தர்மசங்கடமாக இருக்கும்.

சிபிஐயின் கிடுக்குப்பிடி தேசிய அளவில் காங்கிரஸை கழவில் ஏற்றும். அதற்கு காரணம் அவர்களது தோழமைக் கட்சியான திமுக. இந்த களங்கத்தோடு அவர்கள் மேற்கு வங்கம், கேரளா, ஆசாம் மாநில தேர்தல்களையும் காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த மூன்று மாநிலங்களிலும் தங்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் உறுதியாக்க் நம்புகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் அவமானங்களை ஆசையோடு வாங்கி அணிந்து கொள்வதை விட, கெளரவத்தை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறது.

திகார் ` திகில்’ திமுகவைத் தொட்டுவிட்டது. அதற்கு உதவ முடியாத நிலையில் காங்கிரஸ். புருஷன் வீட்டிலிருந்து மனைவி பிறந்த வீடு போயிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். `அவள் வரமாட்டாள் விவாகரத்து உறுதியாகிவிட்டது ‘ என்கிறார்கள் ஜன்பத்திற்கு நெருக்கமானவர்கள்.

Share

Filed under: Tamil

Trackback Uri